நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்
நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பினர் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், மத்திய நாக்பூர் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலை எரிப்பதாக தகவல் பரவிய நிலையில் இரு தரப்பினருக்கு இடையே கலவரமானது.
வன்முறை சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 20 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர நாக்பூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ”இந்தக் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த கும்பல் கற்கள், ஆயுதங்களுடன் முன்பே தயாராக இருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினரின் கடைகள், குடியிருப்புகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இது திட்டமிட்டத் தாக்குதலைப் போலத் தெரிகிறது.
துணை கமிஷனர் கோடாரியால் தாக்கப்பட்டார். 33 காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர். தாக்குதலில் மக்கள் பலரும் காயமடைந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

11 காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகருக்குள் நுழையும் பல வழிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் காரணமானவர்களுக்கு, அவர்களின் மதம் சார்ந்த பாரபட்சமன்றி தண்டனை வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் சம்பாஜி மகாராஜா குறித்து மக்களுக்கு உண்மையான வரலாற்றைக் கூறினாலும் ஔரங்கசீப்ப்புக்கு எதிரான மக்களின் உணர்வுகளைத் தூண்டியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மாநிலத்தின் முதலீடுகளைப் பாதிக்கின்றது. மக்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரின் மதத்தை மதித்து சகோதரத்துவத்தைப் பேணவேண்டும்” என அவர் தெரிவித்தார்.