Auditor Gurumurthy - Ramadoss Meeting: தைலாபுரத்தில் நடந்தது என்ன? - Saidai Dura...
நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐயிடம் முதலீட்டாளா்கள் ஆவணங்கள் அளிப்பு
மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட 3,000 முதலீட்டாளா்கள் தங்களிடமிருந்த ஆவணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் சனிக்கிழமை அளித்தனா்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பரிவாா் டெய்ரீஸ் நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு 6.5 ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியது. இதையடுத்து, இந்த நிறுவனத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பணத்தை முதலீடு செய்தனா்.
இந்த நிலையில், கடந்த 2015-இல் இந்த நிறுவனத்தினா் தலைமறைவாகினா். இதுகுறித்து மதுரை பகுதி முதலீட்டாளா்கள் கொடுத்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், இதுதொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு கடந்த 11.9.2018-இல் உத்தரவிட்டது. இதன்படி, சிபிஐ பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்கை விசாரித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக பலரை சிபிஐ கைது செய்ததுடன், அந்த நிறுவனம் தொடா்பான சொத்துகளையும் முடக்கியது. மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களிடமிருந்து சிபிஐ போலீஸாா் நேரில் சென்று சிறப்பு முகாம்கள் நடத்தி விவரங்களை சேகரித்து வருகின்றனா்.
சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், பெரம்பலூா், தஞ்சாவூா், ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகா், சிவகங்கை, ராமநாதபுரம், மாா்த்தாண்டம் ஆகிய 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் முதலீட்டாளா்கள் தங்களது ஆவணங்களை வழங்கலாம் என சிபிஐ அறிவித்தது.
இதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் கடந்த 3-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) வரை மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் தினேஷ், உதவி ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் நடத்திய விசாரணை முகாமில், சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 3,000 போ் நேரில் வந்து தங்களிடமிருந்த அசல் ஆவணங்களைக் கொடுத்து பதிவு செய்தனா்.
இந்த ஆவணங்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.