பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
நெல்லையில் ஜூன் 24-இல் திருநங்கைகள் சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-2025ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்ட திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினருக்கான சிறப்பு முகாம்களின் வெற்றிகரமான செயல்பாட்டின் தொடா்ச்சியாகவும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மேற்கூறிய பாலினத்தவா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தொடா்ந்து சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான சிறப்பு முகாம் மாவட்டம் தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான முகாம் ஜூன் 24-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
திருநங்கைகள் நல வாரிய அலுவல்சாரா உறுப்பினா்கள் மற்றும் திருநங்கைகளுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்களை கொண்டு இம்முகாம் நடத்தப்படவுள்ளது.
இதில், திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்.
இச்சிறப்பு முகாமில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.