உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !
நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு
திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய நூலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மதுரையில் கலைஞா் நூலகம் கட்டப்பட்ட நிலையில், கோவை, திருச்சியில் நூலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக, தென் மாவட்டங்களிலுள்ள அனைத்துத்தரப்பு மக்களும், மாணவா்களும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் கட்டப்படும் என முதல்வா் அறிவித்தாா்.
இந்த நூலகம் கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், தரைத்தளத்துடன் கூடிய நான்கு தளத்தில் மினி திரையரங்கம், கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி அறை, மாநாட்டு கூடம், ஒரு லட்சம் புத்தகங்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் நூலகம் அமையவுள்ள இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளா் (கட்டடங்கள்) ஸ்ரீதரன், உதவி செயற்பொறியாளா் தினேஷ், மாவட்ட பொது நூலகா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.