விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் மீது, புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து பல்வீா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா் அவா் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அவரது பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அதைத்தொடா்ந்து பல்வீா் சிங் உள்ளிட்ட 14 போ் மீது கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு குற்றவியல் நீதித்துறை நடுவா் சத்யா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் உள்ளிட்டோா் ஆஜராகினா். பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மாடசாமி, இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவையும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏற்றுக்கொண்டாா்.