மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!
நெல்லை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை; ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்!
நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இங்கு ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் தேயிலை தோட்டங்கள் 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த தேயிலை தோட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், மாஞ்சோலை வனப்பகுதியின் குத்தகை வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி அந்நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிலும் தொழிலாளர்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து களக்காடு- முண்டந்துறை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள மத்தியக்குழுவினர், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உயர்மட்டக் குழுவின் தலைவர் சித்தாந்த தாஸ் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளின் தற்போதைய நிலை என்ன? இந்த பகுதியின் மொத்தப்பரப்பளவு, இதற்குரிய சாலை வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதனை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டவுடன் யார், யாரை வனப்பகுதிக்குள் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி செயல்பாட்டிற்கு வரும் என்றனர் ஆய்வுக்குழுவினர்.