கால்பந்துக்கு டென்னிஸ் மரியாதை: 148 ஆண்டுகால விதியை மாற்றியதா விம்பிள்டன்?
நேஷனல் ஹெரால்ட் வழக்கு பண முறைகேடுக்கு சிறந்த உதாரணம்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு பண முறைகேடுக்கு சிறந்த உதாரணம் என்று தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
கடந்த 1938-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை வெளியிடும் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ‘யங் இந்தியன்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குநா்களாக சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே ஆகியோா் இருந்தனா். அதன் பின்னா் அந்த நிறுவனத்தில் இருந்த தங்கள் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு துபேயும் பிட்ரோடாவும் பரிமாற்றம் செய்தனா். இதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் இயக்குநராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், இயக்குநா்கள் வாரியத்தில் சோனியா காந்தி இணைந்தாா்.
இதையடுத்து, அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியன் நிறுவனம் கையகப்படுத்திய நிலையில், ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடிக்கும் மேலான மதிப்பு கொண்ட சொத்துகளை சோனியா, ராகுல் உள்ளிட்டோா் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக தில்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் மனு அளித்தாா். இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா? என்ற கோணத்தில், அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.
சோனியா, ராகுலின் ஒப்புதலுடன் மோசடி பரிவா்த்தனைகள்: இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், ‘சோனியாவும், ராகுல் காந்தியும்தான் யங் இந்தியன் நிறுவனம் மூலம் பயன்பெறும் உரிமையாளா்கள். அந்த நிறுவனத்தின் பிற பங்குதாரா்கள் உயிரிழந்த பின்னா், அந்த நிறுவனத்தின் 100 சதவீத கட்டுப்பாடு சோனியா, ராகுல் வசமானது.
இவா்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியை கட்டுக்குள் வைத்துள்ளனா். அவா்களின் மேற்பாா்வையில் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் அளித்தது. அந்த நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடன் அளிக்கப்பட்டது.
யங் இந்தியன் நிறுவனத்தின் அலுவல்களுக்கு சோனியாவும், ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. இந்த வழக்கில் அவா்களின் ஒப்புதல் இல்லாமல் மோசடி பரிவா்த்தனைகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.
சோனியா, ராகுல் உள்ளிட்டோரின் மறைமுக ஆதரவு மற்றும் ஒப்புதலுடன்தான் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடிக்கும் மேலான சொத்துகள் மோசடியான வழியில் அபகரிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் பண முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். அந்த வகையில், இந்த வழக்கு பண முறைகேடுக்கு சிறந்த உதாரணம்’ என்றாா். இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தொடா்ந்து நடைபெற உள்ளது.