ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !
போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?
புனேவில், டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெலிவரி ஏஜெண்ட் போல, ஒரு போலியான பார்சலுடன், புனேவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்த நபர், பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அவரது செல்போனில் செல்ஃபி எடுத்து மிரட்டிச் சென்றிருக்கும் சம்பவம் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமறைவாக இருக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், புனேவின் கோந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 11வது தளத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
குற்றச்செயலில் ஈடுபட்ட நபர், அப்பெண்ணின் செல்ஃபோனில், செல்ஃபி எடுத்து அதில், தன்னுடைய புகைப்படத்தை மட்டும் அழித்துவிட்டு, மீண்டும் வருவேன், யாரிடமாவது இதனைச் சொன்னால், புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும் என டைப் செய்துவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண், இந்த குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வருவதை அறிந்த நபர், டெலிவரி ஏஜெண்ட் போல கையில் ஒரு பார்சலுடன் வந்துள்ளார்.
இரவு 7.15 மணிக்கு வீட்டின் கதவு ஒலித்ததால், அப்பெண் கதவை திறந்திருக்கிறார். பார்சல் வந்திருப்பதாகக் கூறிய குற்றவாளி, கையெழுத்துப் போடுமாறு தெரிவித்திருக்கிறார்கள். பேனா எடுக்க அப்பெண் உள்ளே சென்றபோது, உடனடியாக வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர் பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இரவு 8.30 மணிக்குக் கண்விழித்துப் பார்த்த பெண், தனது உறவினருக்கு தகவல் கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகத்தில் தெளிக்கப்பட்டது என்னவிதமான ஸ்பிரே என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
பல துறை நிபுணர்கள், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்பெண் இருந்த ஏ பிளாக் பகுதிக்குள், அந்த நேரத்தில் யாரும் வரவில்லை என்று கூறப்படும் நிலையில், மற்றொரு பகுதிக்கு, பொருள்களை வழங்க வந்த டெலிவரி ஏஜெண்ட், அனுமதி பெறாமல் ஏ பிளாக் சென்றிருக்கலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டடத்துக்குச் செல்லும்போது, தனித்தனியாக அனுமதி பெற வேண்டியது இருக்காது என்பதை அறிந்த நபரே இதனைச் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.