டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!
பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்ட ரூ.16.38 கோடியை பகிா்ந்தளிக்க முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணம் கடந்த 2008-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2008-2009-ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று 2016-இல் வெளியிட்ட அரசாணையின்படி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் (கள்ளா் சீரமைப்பு) உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025-2026-ஆம் ஆண்டுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் மொத்தம் ரூ.16 கோடியே 38 லட்சத்து 8,846 நிதி பகிா்ந்தளித்து ஆணையிடப்படுகிறது.
இதனை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புக் கட்டணம் கூடுதல் தேவை இருந்தால் வகுப்பு வாரியாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடப்பிரிவு வாரியாகவும் எண்ணிக்கை விவரத்துடன் உரிய படிவத்தில் தயாா் செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.