"கூட்டணி பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை; அதிமுகவோடு சேரலாம், ஆனால்" - திரும...
உங்களது சக நண்பனாக உங்கள் முன் வந்து நிற்பேன்! - மகன்களுக்கு அப்பாவின் கடிதம் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என் அன்பு மகன்களே...
எப்படி இருக்கிறீர்கள்.. செல்போனில் நீங்கள் தினமும் என்னை அழைத்தாலும், வீடியோ காலில் இருநாட்களுக்கு ஒருமுறை பேசினாலும் திருப்தியைத் தராத உணர்வு என்னவோ தெரியவில்லை கடிதத்தில் தருகிறது. இது கடிதம் அல்ல. அப்பாவின் உணர்வுகள்.
நீங்கள் இருவரும் பிறந்த போதும் உடன் இருக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியது. உங்களின் மழலைப் பேச்சுகள், சுட்டித்தனம், குறும்புத்தனத்தை ரசிக்க ஆசைப்பட்டேன் அதுவும் நிறைவேறியது. நம்மிடம் வசதி இல்லை என்றாலும் என் வருமானத்திற்கு உட்பட்டு உங்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நீங்கள் இருவரும் மாணவப் பருவத்தினை அடைந்து விட்டீர்கள்.

இது சிறகடிக்கும் பருவம். பட்டாம்பூச்சி பருவம். உங்களுக்குப் புரியாது. உங்களை அருகிலிருந்து ரசிக்கும் நிலையில் தற்போது நான் இல்லை. வாழ்க்கைச் சக்கரத்தில் நாமும் சுழல நமக்கென்று பொருளாதார முன்னேற்றம் கண்டிப்பாகத் தேவை. இதோ கடல் கடந்து நான் உங்களை விட்டுவிட்டு வந்து விட்டேன்.
அம்மா உங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் ஒரு தந்தையாக உங்களுக்கு அருகிலிருந்து சொல்லிக் கொடுக்கும் பாக்கியத்தை நான் இழந்து விட்டேன். தாயுமானவனாக உங்களது அம்மா உங்களை கவனித்துக் கொள்கிறாள். நீங்கள் இருவரும் தான் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். மூத்தவனே உனது தம்பியை எனது ஸ்தானத்திலிருந்து கவனித்துக் கொள்வாய் என நம்புகிறேன்.
எதிர்வரும் காலங்களில் எதிர்நீச்சல் போட்டு இந்த உலகத்தில் நீங்களும் சிறந்தவர்களாக உருவாக அடிப்படை பொருளாதாரம் மட்டுமே. எனது ஆசைகள் பொருளாதாரமின்றி நிராசை ஆனாலும் உங்களைக் கைவிடக்கூடாது என்ற உறுதிமொழி எடுத்து இன்று கொதிக்கும் அனலில், இரைச்சலின் உச்சத்தில், கால்கடுக்க நின்று உங்களுக்காக உழைக்கிறேன். இன்னும் சில வருடங்கள் தான்.
நீங்கள் மாணவப் பருவத்தினை முடித்து கல்லூரிக்குச் செல்லும் போது உங்களது தந்தையாக இல்லாமல் உங்களது சக நண்பனாக உங்கள் முன் வந்து நிற்பேன்.

இந்த வாழ்க்கை மிக அழகானது என் குழந்தைகளே. ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதேபோல் நாளிதழ்களையும், புத்தகங்களையும் வாசியுங்கள். சமூக ஊடகங்களுக்கும், சீர்குலைக்கும் கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாக வேண்டாம். நல்ல நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அருகிலிருந்து உங்களை கவனிக்க நான் இல்லை. பொறுப்பினை உணருங்கள். உங்களை கரை சேர்க்க நான் இருக்கிறேன். கவலை வேண்டாம்.
இங்கு நான் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும் உங்களை ஒருபடி மேலே உயர்த்தும்.
எனது ஆசை முத்தங்களும்.. ஆசீர்வாதங்களும் எப்போதும் உங்களுடனே இருக்கட்டும்.
இப்படிக்கு..
உங்களது அப்பா..
