திண்டுக்கல்: குடும்பப் பிரச்னை; இரு பேத்திகளை கொன்றுவிட்டு, விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28). கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் பவித்ராவிற்கு திருமணம் ஆகி, இவர்களுக்கு லித்திக்ஸா (7), தீப்தி (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பள்ளபட்டியில் வாழ்ந்து வந்துள்ள நிலையில், அந்த பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் பவித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பவித்ரா மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த நபருடன் நேற்று மாலை 6 மணி அளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அவமானம் அடைந்த செல்லம்மாளும் காளீஸ்வரியும் குழந்தைகள் இருவரையும் கொன்று விட்டு, வீட்டில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து இடையக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இறந்துள்ள சம்பவம், இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.