கூந்தலை அள்ளிச்சொறுகிட்டு உனக்காக ஓடத்தொடங்கினேன் சாமி! - அம்மாவின் மடல் | #உறவி...
நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, ஏ.சி. போட்டு ஓய்வு எடுத்து... திருடிச்சென்ற திருடர்கள்! | உ.பி ஷாக்
திருட வருபவர்கள் சில நேரம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள் இரவு முழுக்க இருந்து சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு திருடி சென்றுள்ளனர்.
லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாபுல் சிங், தனது சிகிச்சைக்காக குடும்பத்தோடு டெல்லி சென்று இருந்தார். அவர் டெல்லி சென்று இருந்த நேரத்தில் லக்னோவில் உள்ள அவரது வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். திருடர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
காலையில் வீடு திறந்து கிடந்ததை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ அனைத்தும் திறந்து கிடந்தது. உள்ளே இருந்த உடைகள் வீடு முழுக்க சிதறி கிடந்தது.

வீடு முழுக்க திருடர்கள் பணம், நகைகளை தேடியிருந்தனர். அதோடு போலீஸார் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு நூடுல்ஸ் காலி பாக்கெட்கள் கிடந்தது. அதோடு நூடுல்ஸ் சமையல் செய்து சாப்பிட்டு இருந்தனர். அவர்கள் மேகி தயாரித்த பாத்திரம் அப்படியே அடுப்பில் இருந்தது. சாப்பிட்ட தட்டு கூட அப்படியே இருந்தது.
சமையல் அறையில் தீப்பெட்டி, அடுப்பு பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மேலும் திருடர்கள் ஏ.சி போட்டு விடிய விடிய ஓய்வு எடுத்து விட்டு பொறுமையாக வீட்டில் கிடந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து வீட்டு உரிமையாளரான வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு போலீஸார் பேசினர். வங்கி அதிகாரி முன்னெச்சரிக்கையான வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை டெல்லி செல்லும் போது தன்னுடன் எடுத்து சென்று இருப்பது தெரிய வந்தது.
மேற்கொண்டு வீட்டில் இருந்து என்ன பொருட்கள் திருட்டு போனது என்ற விபரம் கிடைக்கவில்லை. வீட்டு உரிமையாளர் டெல்லியில் இருப்பதால் இன்னும் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். ஆனாலும் திருடர்களை கைது செய்ய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். எத்தனை திருடர்கள் வந்தனர் என்ற விபரமும் இன்னும் கிடைக்கவில்லை.!