`விவசாயி வேடமிட்டு போலியாகத் திரிகிறார் முதல்வர் ஸ்டாலின்..!' - எடப்பாடி பழனிசாம...
ஒடிசா கடற்கரையில் ஆண் நண்பர் கண்முன்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 மைனர் உட்பட 10 பேர் கைது
ஒடிசா கடற்கரையில் நடந்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள பெர்ஹாம்பூர் அருகில் இருக்கும் கோபால்பூர் கடற்கரைக்கு 20 வயது கல்லூரி மாணவியும், அவருடன் படிக்கும் மற்றொரு மாணவரும் இரவில் சென்றனர். அவர்கள் இரவு நேரத்தில் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இரவு 8 மணியாகிவிட்ட நிலையில் இரு சக்கர வாகனத்தில் அங்கு 10 பேர் வந்தனர். அவர்கள் தனியாக இருந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பருடன் தகராறு செய்தனர். பின்னர் ஆண் நண்பரை பிடித்து அடித்து உதைத்த அக்கும்பல், அவரை கட்டி வைத்தனர்.
மாணவியை அவர்கள் சிறிது தூரம் தூக்கிச்சென்றனர். அங்கு அவரை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது ஆண் நண்பரும் இரவு 10 மணிக்கு போலீஸ் நிலையம் சென்று இது தொடர்பாக புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து செயல்பட்டு இக்கொடிய காரியத்தில் ஈடுபட்ட 4 மைனர் சிறார்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர். 4 மைனர்களும் சிறார் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் 17 வயதாகிவிட்டது.
இது குறித்து பெர்ஹாம்பூர் போலீஸ் அதிகாரி சரவண விவேக் கூறுகையில்,''கைது செய்யப்பட்டுள்ள 4 மைனர்கள் மீதும் வழக்கமான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்க இருக்கிறோம்''என்று தெரிவித்தார். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களை மைனர்களாக கருதாமல் வழக்கமான குற்றச்சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக கருதி நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இப்பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ''கைது செய்யப்பட்டவர்களில் 23 வயது நபர் பெங்களூரு தொழிற்சாலையில் வேலை செய்கிறார். விடுமுறைக்காக வந்தபோது இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர்தான் இக்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகும். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பரை பிடித்து வைத்துக்கொண்டு குற்றவாளிகள் பணமும் கேட்டுள்ளனர். இதனால் ஆண் நண்பர் கூகுள் பே மூலம் குற்றவாளிகளுக்கு பணம் அனுப்பி இருக்கிறார். அதற்கான ஆதாரம் சிக்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது''என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தேசிய பெண்கள் கமிஷன் ஒடிசா டிஜிபிக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் இச்சம்பவம் குறித்து 3 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மாநில முதல்வர் மோகன் கடுமையாக கண்டித்துள்ளார்.
மனிதாபிமானமற்ற செயல் என்றும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதே போன்று எதிர்க்கட்சி தலைவர் நவீன் பட்நாயக்கும் இச்செயலை கடுமையாக கண்டித்துள்ளார். சம்பவம் நடந்த கோபால்பூர் கடற்கரை 18 கிலோமீட்டர் கொண்டது ஆகும். இதில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே மக்கள் கூட்டம் இருக்கும். மற்ற அனைத்து பகுதியும் ஆட்கள் இல்லாமல் இருட்டாக இருப்பது வழக்கம். இதனால் அங்கு என்ன நடந்தாலும் தெரியாது. கடந்த ஒரு வாரத்தில் ஒடிசா கடற்கரையில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் பூரி கடற்கரையையொட்டிய ஓட்டலில் 9வது வகுப்பு படிக்கும் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.