கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு... அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!
கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை பூட்டி விட்டு அர்ச்சகர் சென்று விட்டார்.

நேற்று காலை அர்ச்சகர் மீண்டும் கோயிலுக்கு வந்தபோது கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அருகிலேயே ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
தகவலறிந்த குனியமுத்தூர் காவல்துறையினர் உடனடியாக கோயிலுக்கு சென்று, தூங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி விசாரணை செய்தனர். அதில் அந்த நபர் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த சின்னையன் என்று தெரியவந்தது. அவர் மீது ஏற்கெனவே பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.

இந்த கோயிலுக்கும் திருடுவதற்காக சென்ற சின்னையன், போதை தலைக்கேறியதால் அப்படியே படுத்து தூங்கியது தெரியவந்துள்ளது. சின்னையன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவைப்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் விநாயகர் கோயிலுக்குள் சென்று உண்டியலை உடைத்து சுமார் ரூ.8,000 திருடியுள்ளார். மேலும் கோயில் கருவறை கதவை இரும்பு கம்பி மூலம் உடைத்து, அங்கிருந்த பொருள்களையும் திருடியுள்ளார். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்த காரணத்தால், மழை நின்றதும் செல்லலாம் என படுத்து தூங்கியுள்ளார்.

அதிக போதையால் அவர் அசந்து தூங்கியதில் சிக்கி விட்டார். கோயில் நிர்வாகத்தினர் அளித்தப் புகாரில் காவல்துறையினர் சின்னையன் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.