வீட்டில் புகுந்து சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்.. மடக்கிப் பிடித்த மக்கள், தப்ப விட்ட காவல்துறை?
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில் உள்ள வீட்டில் அழகப்பன் (வயது 49) மற்றும் அவரது வயதான தாய் சொர்ணம் (75) ஆகியோர் வசித்து வருகின்றனர்.
அழகப்பன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இரண்டு பேர் மட்டுமே தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று இரவு (16.06.2025) அவ்வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தின் வழியாக முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஆறு பேர் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் உள்ளே புகுந்து, வீட்டினர் யாரும் வருவார்களா என மறைந்திருந்துள்ளனர்.
அப்போது வெளியில் சென்று திரும்பிய அழகப்பன் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே வந்துள்ளார். அவரை மடக்கிப்பிடித்த ஆறு பேரும் அவரை அடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்று, "உனது வீட்டில் 20 கோடி ரூபாய் பணம் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஒழுங்கு மரியாதையாக அந்தப் பணத்தை எங்களிடம் கொடுத்துவிடு" என கத்தியைக் கொண்டு இடது காலில் குத்தியும் வாயில் கிழித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த கழிவறை உள்பட அனைத்து அறைகளிலும் பணம் உள்ளதா? எனத் தேடி உள்ளனர். சத்தம் கேட்டு வீட்டின் மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தாயார் சொர்ணம் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து ஒருவன் மாடிக்குச் சென்று அவரை மாடிப்படி வழியாக தரதரவென இழுத்து வந்து தாய், மகன் இருவரையும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கத்தியைக் காட்டி மிரட்டி சித்ரவதை செய்துள்ளார்.
பிறர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் இருந்திருக்கின்றனர். சித்ரவதையை பொறுக்க முடியாத அழகப்பனின் தாய் சொர்ணம் "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என கூச்சலிட்டுள்ளார்.
அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன்பு கூடியுள்ளனர். இதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்களை விரட்டிச் சென்ற பொதுமக்கள் கொள்ளையர்களில் ஒருவனை பிடித்து விசாரித்தில் அவன் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொட்டக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்துள்ளது.

காவலர்கள் வந்ததும் அவர்களிடம் கொள்ளையனை ஒப்படைத்துள்ளனர். இனிமேல் நாங்கள் பார்த்து கொள்கிறோம் யாரும் இவனை அடிக்க வேண்டாம் என காவலர்கள் சொன்னதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். காவலர்களின் அஜாக்கிரதையால் அவர்களின் பிடியிலிருந்த கொள்ளையன் தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயம் அடைந்த அழகப்பன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய கொள்ளையர்களை நத்தம் போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையனை பொதுமக்களே பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்த நிலையில், அவனை காவலர்களே தப்பவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.