இந்த வயதும், தனிமையும் தான் உன்னை எனக்கு புரிய வைக்க வேண்டுமா? - மகளின் வலி | #உ...
``44 டிகிரி வெயிலில் விளையும் ஆப்பிள்; ஏக்கருக்கு ரூ.5 லட்சம்..'' - விவரிக்கும் பொறியாளர்
எஞ்சினியர் டு விவசாயி
மகாராஷ்டிரா விவசாயிகள் எப்போதும் விவசாயத்தில் புதுமையை புகுத்துவது வழக்கம். சோதனை அடிப்படையில் வெப்பமான பகுதியில் விளையாத பயிர்களைக்கூட தங்களது பகுதியில் விவசாயம் செய்து பார்ப்பது வழக்கம்.
குங்குமப்பூவை மகாராஷ்டிராவில் சிலர் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி பயிரிட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த எஞ்சினியர் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு இப்போது மாற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அனைவரும் வழக்கமாக பயிரிடும் பயிர்களை தவிர்த்து புதுமையாக தனது தோட்டத்தில் ஆப்பிள் பயிரிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி அருகில் உள்ள வகாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்ராந்த் காலே என்ற அந்த விவசாயி எஞ்சினியர் வேலையை விட்டுவிட்டு எப்படி விவசாயத்திற்கு வந்தார் என்பது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விக்ராந்த் காலே
இது குறித்து விக்ராந்த் காலே கூறுகையில், "எஞ்சினியரிங் முடித்துவிட்டு இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தியன் சூப்பர் லீக் போன்றவற்றிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் புராஜெக்ட் மேலாளர் வேலை செய்து வந்தேன்.
ஆனால் அந்த வேலையில் எனக்கு திருப்தி இல்லை. எனது சொந்த கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்ய முடிவு செய்தேன். என்னால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு வேலை செய்ய முடியாது என்பதை உணர்ந்து 2017ம் ஆண்டு எனது வேலையை ராஜினாமா செய்தேன்.
ஏற்கெனவே எனது குடும்பத்திற்கு நாற்று உற்பத்தி செய்து கொடுக்கும் நர்சரி மற்றும் பழத்தோட்டம் இருந்தது. எனது தந்தைக்கு எந்த நேரத்தில் எந்த பயிர் சாகுபடி செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற அனுபவம் இருந்தது. அவரது வழிகாட்டுதலில் நவீன விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தேன்.
எனது தாத்தா கோதுமை, கரும்பு, சோயாபீன்ஸ் போன்றவற்றை பயிரிட்டார். அவர்தான் மாதுளை மற்றும் கொய்யாவை அறிமுகம் செய்தார். எங்களது குடும்பம் எப்போதும் புதியவற்றை சோதித்து பார்ப்பதை விரும்பக்கூடியது. வெற்றிகரமான மற்றும் லாபகரமான விவசாயத்திற்கு அது மிகவும் அவசியம்.
44 டிகிரியில் ஆப்பிள் விவசாயம்
எங்களது தோட்டத்தில் ஆப்பிள் பயிரிட முடிவு செய்தபோது இரண்டு மாதம் ஹிமாச்சல பிரதேசம் சென்று தங்கி அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.
2019-ம் ஆண்டு வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய இஸ்ரேல் ரகமான அனா ரகத்தை சேர்ந்த 400 ஆப்பிள் கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்தேன். மண்ணின் தன்மை, சீதோஷ்ண நிலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ரகத்தை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

ஆப்பிள் கற்றுகளை இரண்டு வரிசைக்கு இடையே 14 அடிக்கு இடைவெளியில் நடவு செய்தேன். ஆப்பிளோடு சேர்த்து ஆரம்பத்தில் வெங்காயம், சோயாபீன்ஸ் பயிரிட்டேன். இதன் மூலம் தொடர்ச்சியாக வருவாய் கிடைத்தது.
மூன்று ஆண்டுகள் கழித்து ஆப்பிளில் மகசூல் கிடைத்தது. முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு ஆப்பிள் செடியில் இருந்து 30 முதல் 40 கிலோ ஆப்பிள் கிடைக்கிறது. எனது தோட்டத்தில் விளையக்கூடிய ஆப்பிள் ஹிமாச்சல பிரதேசத்தில் விளையக்கூடிய ஆப்பிளுக்கு நிகராக இருக்கிறது.
இரண்டு ஏக்கரில் ஆப்பிள் பயிரிட்டு இருக்கிறேன். இதில் ஆண்டுக்கு 16000 கிலோ ஆப்பிள் கிடைக்கிறது. இதன் மூலம் ஏக்கருக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் கிடைக்கிறது.
எங்களது தோட்டத்தில் விளையும் ஆப்பிள் மகாராஷ்டிரா மட்டுமல்லாது குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதோடு வெள்ளை நவாப்பழம், அவகோடோஸ், தேங்காய் போன்றவற்றையும் எங்களது 40 ஏக்கரில் பயிரிட்டுள்ளோம்.

வெள்ளை நவாப்பழம் அதிக இனிப்பு தன்மையும், மருத்துவ குணமும் கொண்டது. இதன் விற்பனைக்கு நான் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறேன்.
இதனால் நவாப்பழம் மூலம் ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 8 முதல் 10 லட்சம் வருவாய் கிடைக்கிறது. வேளாண் சுற்றுலா மூலம் 1000 மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம். எங்களது தோட்டத்தில் கிவி பழத்தையும் சோதனை அடிப்படையில் பயிரிட்டோம். ஆனால் தங்களது பகுதியில் 44 டிகிரி அளவுக்கு வெப்பம் இருக்கும் என்பதால் செடிகள் கருகிவிட்டது. ஆனால் 44 டிகிரியில் ஆப்பிளை விவசாயம் செய்து வெற்றி பெற்றுள்ளோம்'' என்று தெரிவித்தார்.