தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதில்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று (ஜூன் 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
2016 தேர்தலில் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியை அமைத்ததுப் போல இந்தத் தேர்தலில் விஜய்யை வைத்து மக்கள் நலக்கூட்டணி அமைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரேமலதா, “ தயவு செய்து கூட்டணி குறித்து கேள்வி கேட்காதீர்கள். எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று நிறைய முறை சொல்லிவிட்டேன்.
தற்போது எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறோம். உரிய நேரம் வரும்பொழுது யாருடன் கூட்டணி வைக்கிறோம், எத்தனை தொகுதி, யார் வேட்பாளர்கள் என்பதை சொல்லிவிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து கேப்டன் குறித்து பேசிய அவர், “ கேப்டன் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு கடினமாகத்தான் இருக்கிறது.
தலைவர் இல்லாமல் இந்தத் தேர்தலை சந்திப்பது மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தாலும் அவருடைய கனவு இலட்சியத்தை வென்று எடுப்போம். வெற்றி கனிகளை அவர் காலடியில் சமர்பிப்போம்.
ஜனவரி 9 ஆம் தேதி நாங்கள் நடத்தும் மாநாட்டில் உங்களுக்கான பதில்கள் எல்லாம் கிடைத்துவிடும்” என்று பேசியிருக்கிறார்.