DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் கே.என்.நேருவும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சமீபத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்கள்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தி.மு.க-விற்கு எதிரான வாக்குகளைச் சிதறச் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் கட்டிய மனக்கோட்டையைத் தகர்த்து வருகிறது அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி.
பல கட்சிகள் கூட்டணியில் சேரப் போகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதும் ஸ்டாலின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
வாக்குறுதிகளைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார் ஸ்டாலின்? நீட் தேர்வு இருக்காது என்று கூறி ஆட்சிக்கு வந்தீர்கள்? நேற்று முன்தினம் 5 வது முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன, இதற்கு உங்கள் தலைவர் ஸ்டாலின் என்ன பதில் வைத்துள்ளார் நேரு அவர்களே? இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், நான்காண்டுகளாக திணறிக் கொண்டிருப்பது தி.மு.க-தானே?
எங்களுக்கு சீட் அதிகமாகக் கொடுக்க வேண்டும், தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிப்பதில்லை என்றெல்லாம் சொல்வது யார்? உங்கள் கூட்டணியில் உள்ள வி.சி.க, சி.பி.எம், த.வா.க போன்ற கட்சிகள்தான்.

பெட்டியைப் பற்றி நகராட்சித்துறை அமைச்சராக இருக்கும் நேரு பெயரில் தி.மு.க அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
கலெக்சன், கமிஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலின் மாடல் அரசு, எத்தனைப் பெட்டிகளை அள்ளி குவித்தது என்பதை நேரு சொல்லாவிடில், 2026 இல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் மக்கள் நிச்சயமாகத் தெரிந்து கொள்வார்கள்.
சமீபத்தில் ஈ.டி. விசாரணை வளையத்தில் நேருவின் மகனும், தம்பியும் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் எத்தனை தம்பிகள் சிக்குவார்களோ? எத்தனை தி.மு.க-வினர் கம்பி எண்ண போகிறார்களோ? என்ற மரண பீதியில் தி.மு.க உறைந்து போய் உள்ளதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த பயத்தை அப்படியே தொடருங்கள், 2026 களத்தில் சந்திப்போம்.