Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஏற்கனவே 220-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பாகிஸ்தான் இஸ்ரேலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகளும் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்குப் பொறுப்பேற்க வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விளக்கி அரசியல் ஆய்வாளர்கள், ``ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களும், அதனால் வலுவடைந்துவரும் மோதலும், ஈரான் எல்லையைக் கடந்து பாகிஸ்தானைப் பாதிக்குமோ என்ற அச்சத்தைத் தூண்டியிருக்கிறது. அதனால்தான் ஈரானுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் மோதல் போக்கையும் கடந்து ஈரானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான் வழியாக ஈரானுடன் 905 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், ஜூன் 15 முதல் பலுசிஸ்தானில் ஐந்து எல்லை வாயில்களை மூடியிருக்கிறது.
கடந்த சில நாள்கள் 500க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள், முக்கியமாக யாத்ரீகர்கள், மாணவர்கள் ஈரானிலிருந்து நாடு திரும்பி வந்துள்ளனர்.

பாகிஸ்தானும் ஈரானும் தங்கள் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.
ஜனவரி 2024-ல், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. அந்த மோதலுக்குப் பிறகு அண்டை இருநாடுகளும் சமாதானம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.