கேரளத்தில் தொடரும் கனமழை! மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!
கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாக அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
இதனால், அவ்வப்போது அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கைகள் கொடுக்கப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஜூன் 18) காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆர்ஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் அடுத்த 3 மணிநேரங்களுக்கு மட்டும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேரளம் - கர்நாடகம் - லட்சத்தீவு கடல்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:தேனிலவுக்கு முன் காதலனுடன் தப்பிய புது மணப்பெண்! நல்லவேளை, உயிர் பிழைத்தேன் என மணமகன் மகிழ்ச்சி!