2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!
தரமணி: தொழில்நுட்பக் கல்லூரி சாலையின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
சென்னை தரமணி, மத்திய தொழில்நுட்பக் கல்லூரி(CPT) நுழைவு வாயில் ஒட்டி பிரியும் சாலை, பரபரப்பான ராஜிவ் காந்தி சாலையையும், குடியிருப்பு பகுதிகளான ஸ்ரீராம் நகர் , பள்ளிப்பட்டு, களிகுன்றம் போன்ற பகுதிகளையும் இணைக்கும் இணைப்பு சாலையாக இருப்பதால்... எந்நேரமும் மக்கள் பயன்பாட்டிலும் பொதுப்பாதையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த சாலையில் மத்திய தொழில்நுட்பக் கல்லூரி சுற்றுச்சுவர் ஒட்டியும், எதிர் புறமும் குவிந்து கிடக்கும் குப்பைகள், கடந்து செல்வோரை முகம் சுளிக்க வைத்தன. கட்டட இடிபாடுகளில் கிடைக்கும் கழிவுகள் , கட்டட புனரமைப்பின் போது எடுக்கப்படும் சுண்ணாம்பு அட்டைகள், மருத்துவக் கழிவுகள் என இந்தச் சாலையில் ஏராளமாய் கொட்டப்பட்டு வந்தன. மேலும், பல நேரங்களில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``பகலில் யாரும் இந்த ரோட்டில் வந்து குப்பை கொட்டுவது கிடையாது. தினமும் இரவில் வந்து கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் எப்போதாவது வந்து சுத்தம் செய்துவிட்டுச் செல்வார்கள். மறுநாளே திரும்பவும் வந்து யாரோ கொட்டிவிட்டுப் போவார்கள்.
இது தொடர்கதையாகி விட்டது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசிக்கொண்டு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனக் குமுறியிருந்தனர்.
அது தொடர்பாக, ``தரமணி : மத்திய தொழில்நுட்பக் கல்லூரி சாலையா... குப்பைக் கிடங்கா? - முகம் சுளிக்கும் மக்கள்!" என்ற தலைப்பில் விகடன்.காமில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியின் எதிரொலியாகச் சம்பந்தப்பட்ட பகுதியின் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், இந்தச் சாலையில் குவியல்... குவியலாய் கொட்டப்பட்டுக் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்து, நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.






இது குறித்துப் பேசிய பகுதி மக்கள், ``விகடனில் செய்தி வெளியான பிறகு, கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சுத்தம் செய்துவிட்டுச் சென்றார்கள். ஆனால், மீண்டும் இங்குக் குப்பைகளைக் கொட்டாதவாறு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். மேலும், இந்தச் சாலையில் மருத்துவமனையும் அமைந்திருக்கிறது. எனவே சுகாதாரம் பேணுவது மிக முக்கியமான ஒன்று" என்றனர்.