வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!
அணைக்கட்டு: தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்த்தொற்று அபாயம்- அரசு பள்ளியை கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சமீபத்தில் வேலூரில் பெய்த கனமழை காரணமாக இந்த அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒரு வாரமாக மழை நீர் தேங்கி நிற்கின்றது. இந்த பள்ளியின் சுற்று சுவர் அருகிலேயே மழை நீரானது கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த பள்ளியின் வளாகத்திற்குள் உள்ள கழிவறை அருகிலேயே மழை நீரானது தேங்கி நிற்கிறது. இந்த பள்ளியின் அருகிலேயே அகரம் நான்கு முனை சந்திப்பு அருகே எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செய்யப்பட்டு வருகிறது. அங்கு மழை காலங்களில் தேங்கும் நீரானது தாழ்வான பகுதியில் அமைந்து இருக்கும் இந்த பள்ளியின் வளாகத்திற்குள் வந்து அப்படியே நிற்கிறது.

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக அகரம் அரசு உயர்நிலை பள்ளியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதியில் பள்ளி வளாகம் இருப்பதினால் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பள்ளியின் கழிவறைக்கு அருகிலேயே மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீர் வடிந்து செல்ல வழியே இல்லாத காரணத்தினால் அப்படியே நிற்கிறது. கோடை மழைக்கே நிலைமை இப்படி என்றால், பருவ மழை காலங்களில் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும் என்று யோசித்து பாருங்கள். பருவ மழை காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் நுழைவாயிலில் தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தண்ணீர் தேங்கி நிற்காதபடி தாழ்வான பகுதியை மண் கொட்டி மேடாக்க வேண்டும். மழைநீர் தேங்கி நோய்த்தொற்று அபாயமும் நிலவுகிறது. எனவே, இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இது குறித்து அகரம் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, “மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து அகரம் ஊராட்சி தலைவருக்கு ஒரு கடிதமாக எழுதி கொடுத்து உள்ளேன். தண்ணீர் தேங்காதபடி பள்ளியின் வளாகத்திற்குள் மண் கொட்டி மேடாக்க அகரம் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உள்ளார்” என்றார்.