பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி
பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிா்க்க காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைத் தடுக்க நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலிருந்து ஐம்பது லட்சம் பெறப்பட்டு, நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு
வருகின்றன. இவற்றை கண்காணிக்க பழனி நகர காவல் நிலையத்தின் மாடியில் தனியே கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பழனியில் கூடுதலாக சுமாா் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிக இடங்களில் சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு கூடுதலாக நிதி தேவைப்படும் நிலையில், பழனியில் உள்ள அனைத்து வணிகா் சங்கங்கள், விடுதி, உணவு விடுதி சங்கத்தினா் உள்பட பல்வேறு வணிக அமைப்புகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் காவல் துறையினருக்கு உதவும் வகையில் நிதிதிரட்டி வழங்கி வருகின்றனா்.
இதுகுறித்து பழனி அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்டத் தலைவா் ஜே.பி. சரவணன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்ளிட்டோா் கூறியதாவது:
காவல் துறைக்கு பல்வேறு வணிக அமைப்புகளும் முன்வந்து தங்களால் இயன்ற நிதியை வழங்கி வரும் நிலையில், சிலா் காவல் துறைக்கு அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனா். காவல் துறையினா் இதற்கென தனி கட்செவி அஞ்சல் குழு அமைத்து அன்றாட வரவுகளை தெரிவித்து வரும் நிலையில், யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றனா்.