45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்; பிரதமருக்கு இந்தியா கூட்டணி கடிதம்!
பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது.
தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு போர் பதற்றம் நிலவிய நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை உடன்பட்டதாகவும், போர் முடிவுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி, போரை நிறுத்த கோரியதால் தான் போரை நிறுத்தினோம் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
ஆனால், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் நடத்திய பேச்சுவார்த்தை மூலமே இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றது.
இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸின் தீபேந்தர் ஹூடா பேசியதாவது:
”நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டக் கோரி 16 அரசியல் கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போதும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் நமது ராணுவத்துக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் ஆதரவாக நின்றன.
அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்தபோது, அனைத்துக் கட்சிகளும் நமது ஆயுதப் படைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம்.
பஹல்காம், ஆபரேஷன் சிந்தூ, அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு வரை, நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது மற்றும் நமது எதிர்கால உத்திகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இப்போது இந்திய அரசு தனது கருத்துக்களை உலகிற்கு முன் வைத்து வருவதால், நாடாளுமன்றத்திலும் அரசாங்கம் அதையே செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.