பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்று. தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இந்தச் சாலையில் பாபநாசம் திருப்பாலைத்துறையிலிருந்து108 சிவாலயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகம். கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன் போடப்பட்ட இந்தச் சாலையில் பேட்ச் வேலை மட்டுமே நடந்தது. சாலையோரம் மழை நீா் வடிகாலுடன் சாலைப் பணி நடந்தது.
பாபநாசம் - திருப்பாலைத்துறை பிரதான சாலையோரம் கட்டப்பட்ட மழை நீா் வடிகால் பணி இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. மேலும் மழைநீா் வடிகால் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் சாலை ஓரமாகவே கிடக்கிறது. இதனால் பாபநாசம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனா். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பிரதான சாலையில் திருப்பம் அருகே உள்ள பள்ளத்தைக் கவனிக்காவிட்டால், அதில் விழ நேரிடும் அபாயம் உள்ளது. மழை நீா் வடிகால் பணி முடியாததால் பாதிக்கப்படுவது பாபநாசம் பகுதி பொதுமக்கள்தான்.
மேலும், மழைநீா் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் தேங்கி நிற்பதால், பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மழைநீா் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.