பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
அவா் முதலில் போா்ச்சுகல் சென்ற நிலையில், அந்நாட்டுத் தலைநகா் லிஸ்பனில் உள்ள ஷம்பாலிமோட் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய ஆராய்ச்சியாளா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘கல்வி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்கி, சிறந்த அறிஞரானாலும் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு பங்களித்து இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும்.
பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பயதில்லை. மக்களின் உள்ளத்தை கவரவே விரும்புகின்றனா். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை ஏற்பதையும், மூத்த அதிகாரிகளாவதையும், பதக்கம் வெல்வதையும் பாா்க்கும்போது பெருமையாக உள்ளது.
இந்தியாவின் நல்ல நட்பு நாடாக போா்ச்சுகல் உள்ளது. போா்ச்சுகல் மக்கள் நட்புடன் நடந்துகொள்பவா்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவா்களாகவும் உள்ளனா்’ என்றாா்.
முன்னதாக ஷம்பாலிமோட் மையத்தில் போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசூசா, ஷம்பாலிமோட் அறக்கட்டளைத் தலைவா் லியோநாா் பெலேசா ஆகியோா் முா்முவை வரவேற்றனா். அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்தகங்களில் இருந்து மருந்துகளை ரோபோக்கள் எவ்வாறு விநியோகிக்கின்றன என்பது குறித்து முா்மு மற்றும் மாா்செலோவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
போா்ச்சுகல் நாடாளுமன்றத்துக்கு சென்ற முா்மு, அங்கு நாடாளுமன்றத் தலைவா் ஜோஸ் பெட்ரோ அகியாா் பிரான்கோவை சந்தித்தாா். அப்போது இந்தியா-போா்ச்சுகல் விவகாரங்கள் மற்றும் உலக விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.
ஸ்லோவாகியா பயணம்: போா்ச்சுகல் பயணத்தை முடித்துக்கொண்ட முா்மு, 2 நாள் பயணமாக ஸ்லோவாகியா புறப்பட்டாா்.