புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தது. அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள் உள்பட ராணுவத் தளவாடங்கள் வழங்கி போரில் நிலைக்க உதவியது.
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளை செய்தார்.
நேட்டோவில் இடம்பெறுவதற்கான திட்டத்தை உக்ரைன் மறந்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ரஷியாவுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டார்.
இதையும் படிக்க : அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்! 2025 பற்றி பாபா வங்காவின் கணிப்பு
இதனிடையே, கடந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபருக்கும் டிரம்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மோதலில் முடிந்தது. இதனால், கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பையும் விருந்தையும் புறக்கணித்துவிட்டு அங்கிருந்து உக்ரைன் அதிபர் புறப்பட்டுச் சென்றார்.
இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் திங்கள்கிழமை டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“புதினைப் பற்றி கவலைப்படுவதில் குறைவான நேரத்தை நாம் செலவிட வேண்டும். புலம்பெயர்ந்த பாலியல் வன்கொடுமை கும்பல்கள், போதைப் பொருள் கும்பல், கொலைகாரர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டுக்குள் ஊடுருவுவதைப் பற்றி யோசிக்க அதிக நேரத்தை செலவிட வேண்டும். இதனால், நாம் ஐரோப்பிய நாடுகள் போன்று மாறுவதை தடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.