பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்
மில்லியன் கணக்கில் தோரியம்! அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறையே இல்லை!
சீனா தன்னிடமுள்ள எல்லையற்ற ஆற்றல் மூல ஆதாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் எனக் கூறப்படுகிறது.
உலகில் அதிக அளவு தோரியம் இருப்பு கொண்ட நாடாக சீனா உள்ளது. எனினும் அவர்களின் தோரியம் ஆற்றல் ஆதாரம் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
சமீபத்தில் வகைப்படுத்தப்பட்ட புவியியல் ஆய்வில் மில்லியன் கணக்கிலான தோரியம் இருப்பை சீனா தற்போது வெளிப்படுத்தியுள்ளது.
கிழக்காசியாவில் உள்ள மங்கோலியா பாயன் ஓபோ உள்சுரங்கத்தில், உலகின் மிகவும் அரிதான தனிமமான தோரியம் இருப்பை அதிக அளவில் சீனா கண்டறிந்துள்ளது.
கதிரியக்கத் தனிமமானது ஆற்றல் மூலத்திற்கு மாற்றாக அமையும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது. புதைபடிவ எரிபொருள்களுக்கும் யுரேனியம் சார்ந்த அணுசக்தி உற்பத்திக்கும் இத்தகைய கதிரியக்கத் தனிமம் மாற்றாக அமையும்.
தோரியமானது கதிரியக்கத் தனிமமாகும். மங்கோலியாவில் உள்ள பாயன் ஓபோ உள்சுரங்கத்தில் இரும்பு தாது பிரித்தெடுக்கும்போது வெளிவரும் கழிவில் போதுமான அளவு தோரியம் உள்ளது. இதில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.
இந்தத் தனிமம் முழுவதும் பிரித்தெடுக்கப்பட்டால், ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என சில மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
அதோடு மட்டுமின்றி அணு எரிபொருளுக்கான மாற்றாகவும் தோரியம் கருதப்படுகிறது. பல நாடுகளின் அணு உலைகளில் யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தோரியம் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் ரேடியோ கதிரியக்கக் கழிவுகள் யுரேனியத்தை விடக் குறைவாக உள்ளது.
அதாவது, தோரியத்தில் இருந்து வெளியேறும் கதிரியக்கக் கழிவின் ஆயுள்காலம், யுரேனிய கதிரியக்கக் கழிவின் ஆயுளை விடக் குறைவு. இதனால் தோரியம் அடிப்படையிலான அணு உலைகளில் பாதிப்பு குறைவு.
தோரியத்தால் ஏற்படும் பலன்கள்
தோரியம் சார்ந்த அணு ஆற்றல் உற்பத்திக்கு மாறுவது கார்பன் வெளியேற்றத்தை பெரிய அளவில் குறைக்கும். ஆற்றல் உற்பத்திக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைக்கும். மேலும் அடுத்த தலைமுறை அணுசக்தி உற்பத்தியில் சீனாவை உலகளவில் முதன்மையாக நிலைநிறுத்தும்.
ஆனால், தோரியத்தை மூலமாகக் கொண்டு அணு ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சீனாவின் முயற்சி இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை. சீனாவில் 55% மின்சார உற்பத்தி தற்போது நிலக்கரியைச் சார்ந்தே உள்ளது.
2021ஆம் ஆண்டு கோபி பாலைவனத்தில் தோரியம் மோல்டன் உப்பு உலையை சீனா நிறுவியது. தோரியத்தை வணிக சந்தைக்கு எடுத்துச்செல்லும் முயற்சியாக இந்த சோதனையில் சீனா ஈடுபட்டது. தற்போதும் அந்த சோதனை தொடர்ந்து வருகிறது.
தற்போது உள்ள உலைகள் யாவும் யுரேனியத்தின் அடிப்படையில் ஆற்றலை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தோரியம் கிடைத்தாலும் அதனை யுரேனியமாக மாற்றி பின்னர் அணு உலைகளில் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தோரியம் என்ற தனிமத்தை நேரடியாக ஆற்றல் உற்பத்தி மூலமாக மாற்றும் சோதனையில் சீனா வெற்றி பெற்றால், தற்போது இருக்கும், ஆபத்தான முறையில் அணுசக்தி தயாரிக்கும் முறையை மாற்றியமைத்த பெருமை சீனாவையே சேரும்.