சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்
கீவ் : உக்ரைனில் நிலையான அமைதி நிலவுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.
இந்த விவகாரம் உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உற்றுநோக்கின், அமெரிக்க தரப்பிலிருந்து சிறிய நாடான உக்ரைனுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நடந்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது. இதனையடுத்து, உக்ரைன் தரப்புக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் பேசிய பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் உக்ரைன் விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் நிரந்தரத் தீா்வுக்கு வழிவகுக்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லையெனில், ரஷிய அதிபா் புதின் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை மீண்டும் தாக்க நேரிடும் என்பதை தெளிவாக சுட்டிகாட்டியுள்ளார்.

இந்தநிலையில், ரஷியா-உக்ரைன் இடையே போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான முயற்சிகளை வரவேற்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தமது சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆதரவான நிலைபாடு தெளிவாகக் கிடைத்து வருகிறது. அவர்கள் தரப்பிலிருந்து அதிக ஒற்றுமையும், ஒன்றிணைந்து இணக்கமாகப் பணியாற்ற அதிக ஈடுபாட்டுடன் அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
அமைதி என்ற முக்கிய விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். உக்ரைனில் அமைதி மெய்ப்பட, உக்ரைனுக்கான பாதுகாப்பு வாக்குறுதிகள் அளிக்கப்பட வேண்டும். இதுவே, அனைத்து ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. அதேபோல, இங்கிலாந்து, துருக்கியே, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைபாடும் இதுவே.
அதேநேரத்தில், அமெரிக்காவின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டிருக்கிறது உக்ரைன். அமெரிக்காவிடமிருந்து கிடைத்து வரும் அனைத்து விதமான ஆதரவுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
உக்ரைனின் சுதந்திரத்தை பாதுகாத்து வருவதற்காக நாங்கள் நன்றியுணர்வுடன் இருக்கிறோம்; இந்த உணர்வானது ஒருநாள்கூட எங்களைவிட்டு விலகியதேயில்லை.
உக்ரைனுக்காகவும் தங்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொருட்டும் எங்களுடன் நட்புறவிலுள்ள நாடுகள் செய்துள்ள விஷயங்கள் மூலம் இது வெளிப்பாடாகியுள்ளது.
உக்ரைனுக்கு அமைதி தேவை; ஆனால், நீடித்த போர் நிறுத்த நடவடிக்கையை நாங்கள் ஏற்க விரும்பவில்லை.
இதனையடுத்து, உக்ரைன் பாதுகாப்புக்காக அளிக்கப்படும் வாக்குறுதிகள் உக்ரைனில் நிலையான அமைதிக்கு முக்கிய துருப்புச் சீட்டுகளாக அமையுமென்பதை வலியுறுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.