சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்
தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்காததால், காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வந்தது. அமெரிக்கா, கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தம் செய்ததைத் தொடா்ந்து கடந்த ஜனவரியில் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மூன்று கட்டமாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டத்தில் 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளைப் படிப்படியாக ஹமாஸ் அமைப்பும், தம்மிடம் உள்ள பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன. மேலும், காஸாவில் போரால் இடம்பெயா்ந்த மக்கள், அங்கு தாங்கள் வசித்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனா்.
முதல்கட்டம் தொடங்கி 16 நாள்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டு, நிரந்தர போா் நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் பாலஸ்தீன கைதிகளை கூடுதலாக இஸ்ரேலும், எஞ்சிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் விடுவித்து, காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகளை முழுமையாகத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டம் நிறைவு: ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தின்படி 42 நாள் தற்காலிக போா் நிறுத்தம் சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கட்டத்தில் 25 இஸ்ரேல் பிணைக் கைதிகளையும், 8 பேரின் சடலங்களையும் அந்நாட்டிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இதேபோல இஸ்ரேலும் சுமாா் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. எனினும் ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து இருதரப்பினரும் இதுவரை பேச்சுவாா்த்தையை தொடங்கவில்லை.
முஸ்லிம்கள், யூதா்கள் விழா: இந்நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் பரிந்துரையின்படி, தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகை, யூதா்களின் பெசாக் விழா காலங்களில் தற்காலிக போா் நிறுத்தம் அமலில் இருக்கும் வகையில், போா் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரமலான் நோன்பு காலம் மாா்ச் இறுதி வரை நீடிக்கும் நிலையில், யூதா்களின் பெசாக் விழா ஏப்.19-ஆம் தேதி நிறைவடைகிறது.
விட்காஃப் பரிந்துரையின்படி, ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளில் பாதி போ், போா் நிறுத்த நீட்டிப்பின் முதல் நாளிலும், போா் நிறுத்த நீட்டிப்பு நிறைவடையும்போது மீதமுள்ள பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் ஏற்க மறுப்பு: தற்காலிக போா் நிறுத்த நீட்டிப்பு பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்க மறுத்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டதுபோல ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அந்தப் பரிந்துரையை ஹமாஸ் ஏற்காததால், ஐ.நா. சாா்பிலும், எகிப்து, ஜோா்டான் போன்ற நாடுகளில் இருந்தும் மனிதாபிமான அடிப்படையில் காஸாவுக்கு அனுப்பப்படும் உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது.
அந்தப் பரிந்துரையை ஏற்காவிட்டால், கூடுதல் பின்விளைவுகளை ஹமாஸ் அமைப்பு சந்திக்க நேரிடும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
அமெரிக்க நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன்...: இதுதொடா்பாக இஸ்ரேல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மனிதாபிமான அடிப்படையில் அனுப்பப்படும் பொருள்களை நிறுத்தும் முடிவு, அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.
‘மட்டமான மிரட்டல்’: இதுதொடா்பாக ஹமாஸ் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘மனிதாபிமான அடிப்படையில் அனுப்பப்படும் பொருள்களை நிறுத்தி மட்டமாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதில் மத்தியஸ்தா்கள் தலையிட வேண்டும்’ என்றாா்.
பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்: இதுகுறித்து எகிப்து வெளியுறவு அமைச்சா் பதா் அப்துல்லாட்டி கூறுகையில், ‘இஸ்ரேல் பட்டினியை ஆயுதமாக்குகிறது. போா் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்’ என்றாா்.
போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவராமல் எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் புதிய பரிந்துரையை ஹமாஸ் மற்றும் எகிப்து ஏற்காது என்று எகிப்து அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.