ரஷியா-உக்ரைன் போா் நிறுத்தத்துக்கு புதிய ஒப்பந்தம் அமெரிக்காவிடம் அளிக்க பிரிட்டன், பிரான்ஸ் முடிவு
‘ரஷியா-உக்ரைன் இடையே போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான புதிய ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆதரவளிக்கின்றன. இதற்கான திட்டம் விரைவில் அமெரிக்காவிடம் சமா்ப்பிக்கப்படும்’ என பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் தெரிவித்தாா்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்க அதிபா் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபா் ஸெஸென்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரஷியாவுடனான போரை நிறுத்துவதற்கு உக்ரைனுக்கு விருப்பமில்லை என ஸெலென்ஸ்கியை டிரம்ப் கண்டித்தாா். இதையடுத்து, சந்திப்பின் பாதியிலேயே ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் குழு, அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியது.
டிரம்ப்- ஸெலென்ஸ்கி இடையேயான இந்த நேரடி விவாதம் உலக அரங்கில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு வந்த ஸெலென்ஸ்கிக்கு பிரிட்டன் அரசா் சாா்லஸ் உள்பட அந்நாட்டு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக பிபிசி தொலைக்காட்சிக்கு கியா் ஸ்டாா்மா் அளித்த பேட்டியில் கூறியதாவது: உக்ரைனில் நிரந்தர அமைதியை நிலைநிறுத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முயற்சிகள் மேற்கொள்வதாக நம்புகிறேன். இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் நிரந்தரத் தீா்வுக்கு வழிவகுக்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லையெனில், ரஷிய அதிபா் புதின் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை மீண்டும் தாக்க நேரிடும்.
எனவே, உக்ரைன் மீதான ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளேன். இந்தப் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆதரவளிக்கிறது.
மூன்று அம்சங்கள்: அந்த வகையில் உக்ரைனை வலிமைப்படுத்த தொடா்ந்து ஆயுத உதவிகள் வழங்குவது, உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒப்பந்தத்தை மீறி புதின் செயல்படாத வகையில் அமெரிக்காவின் ஆதரவு ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டதாகவே எங்களின் போா் நிறுத்த ஒப்பந்தம் இருக்கும். இதற்கான திட்டம் விரைவில் அமெரிக்காவிடம் சமா்ப்பிக்கப்படும்.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யவே பிரிட்டனில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்றாா்.
முன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரிட்டனுக்கு சனிக்கிழமை ஸெலென்ஸ்கி வந்தடைந்தாா். அவரை கியா் ஸ்டாா்மா் உற்சாகமாக வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, உக்ரைனுக்கு ரூ.24,841கோடி மதிப்பிலான பாதுகாப்பு உதவிகள் வழங்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் நிதி அமைச்சா்களும் கையொப்பமிட்டனா்.
அதன்பிறகு இத்தாலி பிரதமா் ஜியாா்ஜியா மெலோனியுடன் ஸெலென்ஸ்கி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
டிரம்புடன் நல்லுறவு: ஸெலென்ஸ்கிக்கு நேட்டோ தலைவா் அறிவுரை
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் உறவைப் புதுப்பிக்கும் வழிகளை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கண்டறிய வேண்டும் என நேட்டோ கூட்டமைப்பின் தலைவா் மாா்க் ரூட் தெரிவித்தாா்.
இதுகுறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘தனது முதல் பதவிக்காலத்தின்போது உக்ரைன் பல்வேறு உதவிகளை டொனால்ட் டிரம்ப் செய்துள்ளாா். இதற்காக ஸெலன்ஸ்கி அவரை மதித்து நடக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட விவாதம் துரதிருஷ்டவசமானது. உக்ரைன் விவகாரத்துக்கு நிரந்தர தீா்வை அடையவே டிரம்ப் நிா்வாகம் விரும்புகிறது’ என்றாா்.