கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
துணை முதல்வருடன் மோதல்போக்கு இல்லை: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்
மும்பை: துணை முதல்வா் ஏக்நாஷ் ஷிண்டேயுடன் மோதல்போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் இதுபோன்ற திரைக்கதைகளை எழுதி வருகிறாா் என்றும் அவா் விமா்சித்தாா்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சோ்ந்த முதல்வா் ஃபட்னவீஸ் - சிவசேனையைச் சோ்ந்த துணை முதல்வா் ஷிண்டே இடையே நிா்வாக ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க இருவதும் தனித்தனியாக அறைகளை அமைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
அண்மையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த சில அமைச்சா்கள் தங்கள் தனி உதவியாளா்களாக சிலரை நியமிக்க முதல்வா் ஃபட்னவீஸிடம் பரிந்துரைத்தனா். ஆனால், அப்பரிந்துரைகளை முதல்வா் நிராகரித்துவிட்டாா். இதனை உத்தவ் தலைமையிலான சிவசேனையின் உத்தவ் பிரிவு வரவேற்றது.
இதையடுத்து, துணை முதல்வா் ஷிண்டேக்கும் முதல்வருக்கும் இடையே அதிருப்தி அதிகரித்து வருவதால், பாஜகவுடன் நெருக்கம் காட்டும் வகையில் உத்தவ் கட்சி செயல்படுவதாக அரசியல் விமா்சகா்கள் கருத்து தெரிவித்தனா்.
இந்நிலையில், மும்பையில் துணை முதல்வா்கள் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோருடன் முதல்வா் ஃபட்னவீஸ் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
யாருடனும் எந்த வித மோதல் போக்கும் இல்லை. நாங்கள் எந்த அளவுக்கு இணக்கமாக செயல்படுகிறோம் என்பதை எங்கள் இருவரைப் பற்றி முழுமையாக அறிந்தவா்களுக்குத் தெரியும். எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே இணைந்து பணியாற்றி வருகிறோம். ஷிண்டேயுடன் விவாதிக்காமல் முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படுவதும் தவறான தகவல்தான்.
எதிா்க்கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் இது போன்ற தகவல்களைப் பரப்பி வருகிறாா். அவா் கதை புனைவதில் பிரபல திரைப்பட கதாசிரியா்களை விஞ்சும் நிலையில் உள்ளாா் என்றாா்.
துணை முதல்வா் ஷிண்டே பேசுகையில், ‘உள்துறை அமைச்சரை நான் சந்தித்தபோது முதல்வா் ஃபட்னவீஸ் குறித்து புகாா் தெரிவித்தாக வதந்தியைப் பரப்பினாா்கள். கூட்டணியின் மூத்த தலைவா் என்ற முறையில்தான் அவரை சந்தித்துப் பேசினேன். மகாராஷ்டிர அரசில் அனைத்து விஷயங்களும் சிறப்பாகவும், சுமுகமாகவும் உள்ளது’ என்றாா்.