விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: வைகோ
``புதிய கட்சிகளை அடக்க நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதிகமாகும்; குறையாது'' - டாக்டர் கிருஷ்ணசாமி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற 24-ம் தேதி இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் இருக்கன்குடி ஊர் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.
ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக இருப்பதை மாற்றி, அனைத்து ஜாதியினரும் அறங்காவலர்களாக இடம்பெற வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் 7-ஆம் மாநில மாநாட்டில் தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
அதுவரையில் கிராமங்கள் தோறும் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இனிக்கின்ற வாக்குறுதிகளை வழங்குகின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் அதனை கசப்பாகவே அனுபவிக்கிறார்கள்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் மட்டுமே ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை, சர்வாதிகார ஆட்சிமுறை மற்றும் ஊழல் ஆட்சிமுறைக்கு முடிவு வரும்.
புதிய தமிழகம் கட்சி “கூட்டணி ஆட்சிதான்” என்பதில் தெளிவாக இருக்கிறது, மேலும் அதற்குத் எந்த அரசியல் கட்சி முழுமையாக உடன்படுகிறதோ, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து இணைந்து செயல்படுவதே புதிய தமிழகம் கட்சியின் நோக்கமாக இருக்கும்.
த.வெ.க. தலைவர் விஜய் இப்போதுதான் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது அவருடைய செயல்பாடுகளை ஆராய்ந்து தெளிவான முடிவு எடுப்போம். ஆனால், “கூட்டணி ஆட்சி” என்கிற விஜய்யின் கருத்தைப் புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.

புதிதாக வரும் கட்சிகளைக் கட்டுப்பாடுகள் மூலம் முடக்க நினைக்கக்கூடாது. புதிதாக வரும் கட்சிகளை மீண்டும் மீண்டும் அடக்க நினைக்கும்போது, அவர்களின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும்; குறையாது என்றார்.