தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார்.
9 மாத காலமாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 வீரர்களுடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை டிராகன் விண்கலம் பூமிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - ராகுல் கேள்வி
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் ஒன்றை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார்.
மார்ச் 1 ஆம் தேதி மோடி எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
”இந்திய மக்களின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின்போது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.
நான் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனைச் சந்தித்தபோது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர்.
நீங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கும்.
நீங்களும், வில்மோரும் பாதுகாப்பாக திரும்ப வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
