கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருவெண்ணெய்நல்லூா் அணைக்கட்டு சாலை, வரதப்பிள்ளை மகள் ரேவதி(40). திருமணம் ஆகாதவா். இவரது தாய் தேவகி அம்மாளுக்கு சொந்தமான நிலத்தில் மாடு மேய்ந்த தகராறில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, கடந்த 10.1.2021 இரவு வீட்டில் இருந்தபோது கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை வழக்கில், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னசெவலை, கொண்டியான் மகன் முத்துக்கண்ணு (60) என்பவரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விசாரணையில் முத்துக்கண்ணு-மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எம். இளவரசன், குற்றவாளிக்கு ஆயுள்சிறை தண்டனை மற்றும் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் முத்துக்கண்ணுவை கைது செய்து கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனா்.