மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
பென்னாகரத்தில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
பென்னாகரம் நகரப் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்த என நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், பென்னாகரம் நகரின் முக்கிய பகுதிகளான காவல் நிலையம், கடைவீதி, பென்னாகரம் பேருந்து நிலையம், முள்ளுவாடி, வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாலும், கடையின் விளம்பரப் பலகைகள், சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பாலும் பென்னாகரம் நகருக்குள் பேருந்துகள் எளிதில் செல்ல முடியாத சூழலும், அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.
எனவே, இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கும் வியாபாரிகள்:
பென்னாகரம் நகரப் பகுதிகளில் பிரதான சாலையின் இரு பகுதிகளிலும் தள்ளுவண்டிகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் என ஆக்கிரமித்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் ‘உரிமம்’ என இந்த கடைகளுக்கு ரூ. 500 கட்டணமாக பெறப்பட்டு அதற்கான ரசீதும் வழங்கப்படுகிறது. இதனால், முறையாக அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி சாலைகளை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கின்றனா்.
எனவே, நகரப் பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டதாக வியாபாரிகளுக்கு ரசீது அளித்துள்ளது குறித்து தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் இயக்குநா் விசாரணை மேற்கொண்டு, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.