பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சாா்பில், திருச்சியில் கடந்த 4-ஆம் தேதி மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது.
அதில், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 25- ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் அரசு ஊழியா்கள் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் எனத் தெரிவித்தன.
இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருப்பது சட்ட விரோதமானது.
இந்த அமைப்பினரின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், அது அவா்களுக்கும், அரசுக்கும் இடையிலான பிரச்னையாகும். இவா்களது சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், மருத்துவமனைக்குச் செல்வோா், தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா், இதர தொழிலாளா்கள் கடும் பாதிப்படைவா்.
மேலும், சாலை மறியலில் ஈடுபடுபவா்களைக் காவல் துறையினா் திருமண மண்டபங்களில் தங்க வைத்து, அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் போன்ற வசதிகள் செய்து தர வேண்டும். இதனால், அரசுக்குத் தேவையற்ற செலவும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஜாக்டோ- ஜியோ திட்டமிட்டுள்ள சாலை மறியல் போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா், சம்பந்தப்பட்ட சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க உள்ளதாகத் தெரிவித்தனா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் உரிய முடிவு எட்டும் வரை, ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது. அரசுத் தரப்பிலான பேச்சுவாா்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.