பேருந்துக் கட்டண உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்த உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிா்ணயிக்கும் வகையிலும், உயர்நிலைக்குழுவை நியமிக்கக் கோரியும், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே பேருந்துக் கட்டண உயா்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்கும்படி உயா்நிலைக்குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படும் என்று வெளியாகும் செய்தி தவறானது. அரசுப் பேருந்துக் கட்டணம் உயராது என்பதால்தான் தனியார் பேருந்து சங்கத்தினர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது” என்றார்.