ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்
பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?
ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் இந்திய நேரப்படி, நேற்று பிற்பகல் 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இவர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 வாரங்கள் தங்கியிருந்து, 7 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். சர்வதே விண்வெளி நிலையத்துக்கு சுக்லா செல்வதற்கு கட்டணமாக 64 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 544 கோடி) செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 1984 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராகேஷ் சர்மாவின் பயணத்துக்கு கட்டணம் எதுவும் அளிக்கப்படவில்லையே என்று இணையத்தில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
சர்மா, சுக்லா ஆகிய இருவரின் விண்வெளிப் பயணங்களும் வேறுபட்டவை. சோவியத் யூனியனின் ‘சோயுஸ்’ விண்கலத்தில்தான், இந்தியா - சோவியத் கூட்டாண்மையில் ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். சோவியத் இன்டர்கோஸ்மோஸ் திட்டமானது, பொதுவாக நட்பு நாடுகளுக்கான செலவுகளை உள்ளடக்கியது. ஆனால், சுக்லாவின் விண்வெளிப் பயணமானது, வணிக ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயணத்தின்போது, 8 நாள்களில் 43 ஆய்வுகளை சர்மா நடத்தினார்.
ஆனால், சுபான்ஷு சுக்லாவின் பயணம், அரசின் ஏற்பாடு அல்ல. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸின் இருக்கையில்தான் சுக்லா சென்றுள்ளார். தனியார் நிறுவனத்தின் இருக்கை என்பதால், ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தில் இந்திய விண்வெளி வீரா் சுக்லா இடம்பெறுவதற்கு இந்திய அரசு ரூ.548 கோடி செலவழித்திருக்கிறது.
இந்தியா சொந்தமாக விண்வெளியில் தமக்கென்று ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு 2040-45 இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான முதல்படியாக சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் அமைந்திருக்கிறது எனலாம். எவ்வாறாயினும், தன்னுடன் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை சுக்லா சுமந்து செல்கிறார்.
இதையும் படிக்க:இஸ்ரேலின் 'டாடி' யார்? ஈரான் கிண்டல்!