பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தினை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையம் 2.94 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அழகிய நாச்சியம்மன் கோயிலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் மூடப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் நின்றுவிட்டு பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து பொன்னமராவதிக்கு செல்லும் திருப்பத்தூர் பனிமணைக்கு சொந்தமான 13 ஆம் எண் பேருந்தின் ஓட்டுநர் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காது, பொன்.புதுப்பட்டியில் தான் நிற்கும் எனக் கூறி பேருந்தின் கதவை மூடி ஓட்டிச் சென்றுள்ளார். அதனை பேருந்தில் பயணம் செய்த பயணி வீடியோ எடுக்கும் பொழுது வீடியோ எடுத்து என்ன செய்யப் போகிறாய்? போய் மேனேஜரிடம் கேளுங்கள் என்று கூறியதோடு சுமார் பத்துக்கும் மேற்பட்ட பயணிகளை அலைக்கழித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து - கார் மோதல்: 4 பேர் பலி
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். எனவே பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்று பயணிகளை அலைக்கழித்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையறிந்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து பேருந்துகளும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் பேருந்து நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக மேலாளர் அரசு பேருந்து ஓட்டுநர் செல்லையாவை பணிநீக்கமும் நடத்துநர் ஆண்டிச்சாமியை பணியிடை நீக்கமும் செய்து அறிவித்துள்ளார்.