விராலிமலை அருகே பழைய இரும்புக் கடையில் தீ விபத்து
திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து நேரிட்டது.
இவ்விபத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே விராலிமலை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி என்பவர் பழயை இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இங்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக், சாக்குப் பைகள், பழைய வயர்கள், காலி பாட்டில்கள், பழைய பேப்பர், அட்டைகளை வாங்கிக் குவித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடையில் இரும்பு வலைகள் அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது வலை அறுப்பதற்காக கிரைண்டிங் செய்தபோது, அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி, பழை அட்டைகள் மீது விழுந்து தீப்பற்றியது.
அதோடுமட்டுமின்றி, குவித்து வைக்கப்பட்டிருந்த பாட்டில், அனல் தாங்க முடியாததால் வெடித்து சிதறின. இதனால் செய்வதறியாது தவித்த தொழிலாளர்கள் கடைக்குள் இருந்து வெளியேறினர்.
தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வெளியேறிய கரும்புகை தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்தது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதைத் தொடர்ந்து நிகழ்விடம் சென்ற நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நீரைப் பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில் கடையின் அருகில் சென்ற மின் வயர்கள் தீயில் கருகி அறுந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும், வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தியதாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இவ்விபத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் கடைக்குள் இருந்த பழைய பொருட்கள் எரிந்து சேதமாகின.