கத்திரி வெயில்: வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!
பாகிஸ்தான் அரசியல் பிரபலங்களின் எக்ஸ் தளப் பக்கங்கள் முடக்கம்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், பாகிஸ்தான் நடிகர்களான மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேஸா கான், சஜல் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள சுற்றுலா நகரமான பஹல்காமிலுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மிது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளே காரணம் என்றும், விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.
மேலும், பஹல்காம் தாக்குதல் குறித்தும் இந்திய பாதுகாப்புப் படை குறித்தும் அவதூறு கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. அத்தோடு பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கி வருகிறது.
அந்தவகையில் தற்போது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து இவர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று முடக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நீட் தேர்வு எப்படி இருந்தது?