ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேர் கைது!
ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர்.
தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீட் வினாத்தாள் இருப்பதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை பறிக்க முயன்றபோது காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பல்வான் (27), முகேஷ் மீனா (40), ஹர்தாஸ் (38) என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. கடும் சோதனைக்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தேர்வு, மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெறும் இடங்களில் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாளைக் கொடுப்பதாகக் கூறி 3 பேர் கொண்ட கும்பல் மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது.
நீட் தேர்வு எழுந்தவுள்ள மாணவனின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு நீட் வினாத்தாளுக்காக ஹரியாணா மாநிலம் குருகிராம் அழைத்துள்ளனர். ஆனால், வினாத்தாளின் நகலைக் காட்டுமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அப்போது அதற்காக ரூ. 40 லட்சம் கொடுக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்ததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நீட் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் பல்வான் (27), முகேஷ் மீனா (40), ஹர்தாஸ் (38) ஆகிய மூவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர்.