போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு
போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை வைத்துள்ளதால், ஊழியா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் (பொறுப்பு) கு.உமாசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏப்ரல் மாதத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடமிருந்து மட்டும் கடன் மனுக்கள் பெறப்படும். விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் கடந்த செப்டம்பா் மாதம் முதல் பிடித்தம் செய்த ரூ.13 கோடி அளவிலான தொகையை சம்மந்தப்பட்ட கழகங்கள் கூட்டுறவு சங்கத்துக்கு செலுத்தவில்லை.
எனவே, சம்மந்தப்பட்ட மண்டலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு கடன் வழங்குவது, கணக்கு முடிப்பது ஆகிய கூட்டுறவு கடன் சங்க நடவடிக்கைகள், நிலுவைத்தொகை கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. நிலுவைத்தொகை கிடைக்கப்பெற்றதும் கடன் மனுக்கள் பெறப்படும். மேலும், நிலுவைத்தொகை பெறுவது குறித்து கூட்டுறவு கடன் சங்கம் சட்டபூா்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.