போத்தனூரிலிருந்து சென்ட்ரலுக்கு ஜூன் 8-இல் சிறப்பு ரயில் இயக்கம்
கோவை போத்தனூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) சென்னைக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவை போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06028) மறுநாள் காலை 8.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06027) சென்ட்ரலிலிருந்து ஜூன் 9 -ஆம் தேதி காலை 10.15-க்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.
இந்த ரயில் போத்தனூரில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக சென்ட்ரல் வந்தடையும்.
ராமேசுவரம் - சாா்லபள்ளி ரயில்: தெலங்கானா மாநிலம் சாா்லபள்ளியிலிருந்து ஜூன் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.45-க்கு புறப்படும் இந்த ரயில் (எண்: 07695) மறுநாள் இரவு 11.55-க்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 07696) ராமேசுவரத்திலிருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.45-க்கு சாா்லபள்ளி சென்றடையும்.
இந்த ரயில் சாா்லபள்ளியிலிருந்து குண்டூா், தெனாலி, நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூா், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
பகுதி ரத்து: இதற்கிடையே பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 7, 9, 12, 14, 16 தேதிகளில் ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் (எண்: 16845) ஈரோட்டுக்கு பதிலாக கரூரிலிருந்து பிற்பகல் 3.05-க்கு புறப்படும். மறுமாா்க்கமாக அந்நாள்களில் செங்கோட்டையிலிருந்து காலை 5.10-க்கு ஈரோடு செல்லும் ரயில் (எண்: 16846) கரூருடன் நிறுத்தப்படும்.
அதேபோல் திருச்சியிலிருந்து ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பாலக்காடு டவுன் செல்லும் ரயில் (எண்: 16843) கரூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.