மக்களுக்கு எவ்வித நன்மையும் திமுக செய்யவில்லை: வி.கே. சசிகலா
மக்களுக்கு எவ்வித நன்மையையும் திமுக அரசு செய்யவில்லை என்றாா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திமுக அரசு மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றும் பணிகளில் இந்த அரசு தீவிரமாக உள்ளது. இதனால், வீடுகளுக்கு 3,4 மடங்கு வரி அதிகரிக்கச் செய்யுமே தவிர வேறு எந்த பயனும் இருக்காது. தமிழக அரசு ரூ. 8 லட்சம் கோடி கடன் வாங்கி அதற்கு ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் வட்டி செலுத்தி வருகிறது. இதனால் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியின்போது மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எம்ஜிஆா், ஜெயலலிதா நடத்திய மக்களாட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றாா். அவருடன், அவரது சகோதரரும், மன்னாா்குடி செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை தாளாளா் திவாகரன் உடனிருந்தாா்.