கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் இணைந்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினர்.
இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கல்வித் துறையில் உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் கருணாநிதி.
கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ள, பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிய கருணாநிதி பெயரில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார்.