மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு
ஜம்மு - காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களை அங்கிருந்து தில்லி வழியாக விமானம், ரயில் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவினர், இந்த சம்பவத்துக்குப் பிறகு தங்களது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஜம்முவில் இருந்து புதுதில்லி வரை பேருந்தில் வந்து, ரயில் மூலம் தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டிருந்தனர். அவர்களை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு வேண்டிய உணவு, மருத்துவப் பரிசோதனை மற்றும் முதலுதவி தேவைப்படுபவர்களுக்கு பரிசோதனை வசதிகள் வழங்கப்பட்டன.
அவர்களை தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே. எஸ். விஜயன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி எண்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏ.கே.எஸ். விஜயன், ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஜம்முவில் இருந்து தில்லி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழக சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் கூறுகையில், "40 பேர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். சம்பவம் நடந்த தினத்துக்கு முந்தைய நாள் நாங்கள் பஹல்காம் பகுதியில் இருந்தோம். அன்றைய தினம் அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தால் நாங்களும் பாதிக்கப்பட்டிருப்போம்.
உயிர் பயத்துடன் ஜம்முவில் இருந்து தனியார் பேருந்து மூலம் தில்லி வந்தோம். தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும், சென்னைக்கு திருப்பிச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளையும் செய்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.
ரயில், விமானங்களில்...
இதற்கிடையே, காஷ்மீரில் தாக்குதலில் காயமடைந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் உள்பட 19 பேர் தில்லியிலிருந்து விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் விமானம் மூலம் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் சென்னை வந்தடைவார்கள் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், தில்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழக சுற்றுலாப்பயணிகள் வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்களில் அனுப்பி வைக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
உடல் அனுப்பிவைப்பு: தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மதுசூதன ராவ் என்பவரின் உடல், விமானம் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை காலை கொண்டுவரப்பட்டு, பின்னர் இங்கிருந்து நெல்லூருக்கு எடுத்து செல்லப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.