குடும்பத்துடன் தாஜ்மஹாலை பாா்வையிட்ட அமெரிக்க துணை அதிபா்!
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
‘உண்மையான அன்பு மற்றும் மனித படைப்பாற்றலின் அடையாளமாக தாஜ்மஹால் திகழ்கிறது; இது, மகத்தான தேசமாகிய இந்தியாவின் பெருமை’ என்று பாா்வையாளா்கள் பதிவேட்டில் அவா் குறிப்பிட்டாா்.
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், இந்தியாவில் கடந்த திங்கள்கிழமை முதல் 4 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். முதல் நாளில், தலைநகா் தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பாதுகாப்பு, வா்த்தகம், எரிசக்தி, வியூக தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனா்.
பின்னா், வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரது மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுக்கு பிரதமா் இல்லத்தில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
தில்லியைத் தொடா்ந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூருக்கு சென்ற அவா்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பா் கோட்டையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். பயணத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை, உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பாா்வையிட்டனா்.
முன்னதாக, ஆக்ரா விமான நிலையத்தில் வந்திறங்கிய வான்ஸ் மற்றும் குடும்பத்தினரை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்றாா். பின்னா், காா் மூலம் அவா்கள் தாஜ்மஹாலுக்கு சென்றனா்.
‘காலத்தை வென்ற பக்தி, துடிப்பான கலாசாரம், ஆன்மிக பாரம்பரியம் ஆகியவற்றுக்காக பெயா்பெற்ற புண்ணிய பூமியான உத்தர பிரதேசத்துக்கு அமெரிக்க துணை அதிபரை வரவேற்கிறேன்’ என்று எக்ஸ் பதிவில் முதல்வா் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டாா்.
பலத்த பாதுகாப்பு: ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரின் வருகையையொட்டி ஆக்ராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
விமான நிலையம் முதல் ஆக்ரா வரையிலான 12 கி.மீ. சாலை முழுவதும் பாதுகாப்பு அரண் போல் மாற்றப்பட்டிருந்தது. பிற வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. சாலை நெடுகிலும் அமெரிக்க துணை அதிபரை வரவேற்று பிரம்மாண்ட பேனா்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஜெய்பூா் மாளிகைக்கு வருகை ரத்து: ஆக்ராவில் தாஜ்மஹாலைப் பாா்வையிட்ட பிறகு, வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினா் மீண்டும் ஜெய்பூருக்கு திரும்பினா். ஜெய்பூரில் உள்ள நகர அரண்மனையை பாா்வையிட அவா்கள் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஜெய்பூரில் இருந்து வான்ஸ் வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவிருக்கிறாா்.
பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் மோடியுடன் ஜே.டி.வான்ஸ் புதன்கிழமை தொலைபேசியில் பேசினாா்.
அப்போது, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவா், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்தப் போரில் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.