ஏப். 25 முதல் கோடை விடுமுறை! ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் ஏப். 25 முதல் கோடை விடுமுறை தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு ஏப். 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஏப். 25 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணிகளை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப். 30 எனத் தெரிவிக்கப்படுகிறது.
2025-2026 ஆம் கல்வியாண்டில், ஜூன் 2 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே. ஜூன் 2 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 24ஆம் தேதியுடன் முடிகிறது.
இதையும் படிக்க | டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!